சென்னை என்னும் கிராமம் - நீர் ஆதாரங்கள் - எதுவும் இல்லை?

 நண்பர் ஒருவர் திருமண அழைப்பிதழ் கொடுத்தார். ஓர் இடத்தில் சின்ன இடறல். திருமண மண்டப முகவரியில், இறங்க வேண்டிய இடம் என்ற இடத்தில் 'ஏரிக்கரை பஸ் ஸ்டாப்' என்று போட்டிருந்தது.


அந்த இடத்தில் ஏரி எங்கே இருக்கிறது' என எங்கள் இருவருக்குமே தெரியவில்லை. மாரியம்மன் நகர், மகாலட்சுமி நகர் என்று அங்குள்ள நகர்கள் தான், அந்தநாளைய ஏரி என்பது தெரிய வந்தது. இப்படி குளக்கரை ஸ்டாப்பிங், குளத்தூர் பஸ் ஸ்டாண்டு, ஆத்தூர் மார்க்கெட் என்ற பெயர் உள்ள இடங்களில் பெயருக்கு காரணங்கள் மிஸ் ஆகியிருக்கும். நீர் ஆதாரங்களை ஆதாரம் இல்லாமல் அழிப்பது அதிகாரத்தில் இருப்பவர்களின் சிரமம் இல்லாத அழிச்சாட்டியமாக இருக்கிறது.

சென்னை கிராமம், செங்கல்பட்டு மாவட்டத்தின் ஓர் அங்கம். செங்கல்பட்டு மாவட்டத்தில் காவிரி, தாமிரபரணி, வைகை ஆறுகளைப் போல் ஜீவ ஆறுகள் எதுவும் இல்லை. எல்லாமே மழை நீர் வடிகால் ஆறுகள். மலையில் இருந்து புறப்படுபவை அல்ல. அதனால் இங்கே ஏரிகள் அதிகம் உருவாக்கப்பட்டன. வீரநாராயணர் (வீராணம்) ஏரி, மதுராந்தகம் ஏரி, பூண்டி ஏரி, புழல் ஏரி, சோழவரம் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி, வியாசர்பாடி ஏரி, பொன்னேரி போன்ற பெரிய ஏரிகள் என்று சென்னையைச் சுற்றி உள்ளன. அது தவிர ஒவ்வொரு ஊருக்கும் ஒன்றிரண்டு சிறிய ஏரிகள் இருக்கும். செங்கல்பட்டுக்கு ஏரி மாவட்டம் என்று ஒரு பெயரும் உண்டு.

சென்னையில் நுங்கம்பாக்கம் ஏரி, தேனாம்பேட்டை ஏரி, வியாசர்பாடி ஏரி, முகப்பேர் ஏரி, திருவேற்காடு ஏரி, ஓட்டேரி, மேடவாக்கம் ஏரி, பள்ளிக்கரணை ஏரி, போரூர் ஏரி, ஆவடி ஏரி, கொளத்தூர் ஏரி இரட்டை ஏரி, வேளச்சேரி ஏரி, பெரும்பாக்கம் ஏரி, பெருங்களத்தூர், கல்லு குட்டை ஏரி, வில்லிவாக்கம் ஏரி, பாடிய நல்லூர் ஏரி, வேம்பாக்கம் ஏரி, பிச்சாட்டூர் ஏரி, திருநின்றவூர் ஏரி, பாக்கம் ஏரி, விச்சூர் ஏரி, முடிச்சூர் ஏரி, சேத்துப்பாடு ஏரி (ஸ்பர் டாங்க் - ஸ்பர்டாங்க் ரோடு), செம்பாக்கம் ஏரி, சிட்லபாக்கம் ஏரி என்று பெரிய ஏரிகளின் பட்டியலே முப்பதை நெருங்கும். சிற்சில சிறிய எரிகளும், குளங்களும், குட்டைகளும் நீர் ஆதாரங்களாக இருந்தன.

70 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த பல ஏரிகள் இப்போது இல்லை. நகரம் வளர வளர அதற்கு ஏற்ப நீர் நிலையும் வளர வேண்டும் என்பது தான் நேர்மையான விகிதம். ஆனால், தற்போது சென்னையில் இருக்கும் ஏரிகளை விரல் விட்டு எண்ணி விடலாம்.

நெரிசல் மிகுந்த போரூர் சிக்னலைக் கடந்து ராமசந்திரா மருத்துவமனைக்குச் செல்பவர்கள் கண்களில் பெரிய ஏரியொன்று தென்படும். 200 ஏக்கர் பரப்பளவில் 46 மில்லியன் சதுர அடி நீர் கொள்ளளவுடன் இருக்கும் இந்த ஏரியைப் போரூர் ஏரி என்று அழைக்கிறார்கள். சென்னைக்கு மிக அருகே இந்த ஏரி தப்பிப் பிழைத்திருப்பது மாபெரும் சவால் தான்.

ஏரியின் முன்பு உள்ள ‘ஆதி குபேர ஜலகண்டேஸ்வர'ருக்குப் பயந்து விட்டு விட்டார்களோ?

ஆக்கிரமிப்புகளின் காரணமாக ஏரிகள் சுருங்க ஆரம்பித்தன. கான்கிரீட் காடுகள் சென்னைக் காடுகளை துவம்சம் செய்தன.

பள்ளிக்கரணை ஏரி இந்தியாவின் சதுப்பு நில ஏரிகளில் ஒன்று. பல ஆயிரம் ஏக்கர் பரப்பில் அமைந்திருந்த இந்த ஏரிக்காகவே பல வெளிநாட்டுப் பறவைகள் வரும் போகும். சாக்கடை, வேதிப் பொருள் கலப்பினால் இப்போது பறவைகள் வரவு குறைந்து விட்டதாக, அவ்வப்போது பறவை ஆர்வலர்கள் வருத்தப்படுவதோடு சரி. அரசாங்கம் பெரிதாக அக்கறை காட்டவில்லை.

ஏரிகள் என்பன ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை. ஒரு ஏரியில் நீர் நிரம்பினால் அது அடுத்த ஏரிக்கு நீரை வார்க்கும். மயிலாப்பூர் கோயில் குளம் 90-களில் பல ஆண்டுகளாக வற்றிக் கிடந்தது. கவாஸ்கர் ஆகும் ஆசையில் நிறைய பேர் அங்கங்கே ஸ்டம்ப் நட்டு வசதியாக கிரிக்கெட் ஆடிக் கொண்டிருந்தார்கள். அப்போது அந்தக் குளம் திடீரென்று வற்றிப் போனதற்கு ராஜ அண்ணாமலைபுரத்தில் இருந்த ஒரு குட்டையைத் தூர்த்து விட்டது தான் காரணம் என்று அப்போது சர்ச்சை ஓடியது. தூர்த்த குட்டையை மீண்டும் தூர் வாரினார்கள் என்பது என் நினைவு. அதன் பிறகு தான் மயிலாப்பூர் குளத்தில் நீர் நிரம்பியது.

சென்னையில் ஸ்பர் டாங்க் ரோடு பலருக்கும் தெரிந்திருக்கும். அது குளத்தின் பெயரால் வந்த பெயர் தான். அங்கிருந்த ஒரு குளம் குதிரையின் குளம்பு போல இருந்தது. ஆங்கிலத்தில் ஸ்பர் என்றால் குதிரை என்று ஒரு அர்த்தம். குதிரைக்குளம்பு குளம் சாலை என்பது தான் ஸ்பர்டாங்க் ரோடு...

நண்பர் திருமண அழைப்பிதழில் சொன்ன ஏரிக்கரை சாலை போல இந்த குதிரைக் குளம்பு குளமும் இப்போது ஈகா தியேட்டருக்கு எதிரே இளைத்துப் போய் கிடக்கிறது.


Read Related articles in below link

நீர் மேலாண்மை - இணைப்புகள்

Comments

Popular posts from this blog

ARAVA NADU - ETYMOLOGY

Relationship between Number 7, Sabtha Kanni & Assevagam

Bharatiya Jana Sangh - Syama Prasad Mukherjee